28 February 2012

வரதட்சணை விருந்து மவ்லூது விருந்து வித்தியாசம் என்ன?


கேள்வி : பிறந்தநாள், பெயர்சூட்டுதல், கத்னா செய்தல் போன்றவற்றிற்காக வீடுவீடாக இனிப்பு கொடுத்துவிடுதல், கர்ப்பிணிப்பெண்ணுக்கு ஏழாவது மாதம் ஆனதும் பாகுச்சோறு ஆக்கி பகிர்தல், சிறுவர்,சிறுமியர் குர்ஆனை முழுமையாக ஓதிமுடித்துவிட்டால் அதற்காக இனிப்பு கொடுத்துவிடுதல், மரணித்தவர்க்காக  40 ஆம் நாள் ஃபாதிஹா ஓதி பெட்டிச்சோறு போடுதல், மரணித்தவர் வீட்டிற்குச் சென்றால் அங்கு வாழைப்பழம் கொடுத்தல்- இவையெல்லாம் எங்கள் ஊரில் நடைமுடைப்படுத்தப்படும் சடங்கு சம்பிரதாயங்கள். நாம் இவற்றில் கலந்துக்கொள்ளாவிட்டாலும் நம் வீடு தேடி தின்பண்டங்களைக் கொடுத்துவிடுகிறார்கள். இவற்றை நாம் வாங்கலாமா?
மேலும் வரதட்சணை வாங்கிய மணமகன் வீட்டிலிருந்தும், மற்றும் பெண்வீட்டிலிருந்தும் நமக்கு சாப்பாடு கொடுத்துவிடுகிறார்கள். அதையும் வாங்கிக்கொள்ளலாமா?
 மொத்தம் 9 விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளேன். இவற்றில் எது எதற்கெல்லாம் அனுமதி இருக்கிறது? தயவுசெய்து விரிவாக பதில் தரவும்.

பதில் : நீங்கள் குறிப்பிட்டுள்ள 9 விசயங்களும் மார்க்கத்திற்கு மாற்றமான பித்அத்தான விசயங்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இவற்றைப் புறக்கணிப்பதும், இவற்றை இல்லாமல் ஆக்கப் பாபடுவதும் அனைத்து முஃமின்கள் மீதும் கடமையாகும்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் நாம் கலந்து கொள்ளாவிட்டாலும் நம் வீடு கொடுத்து விடும் தின்பண்டங்களையும், உணவையும் கொடுத்து விடுகிறார்கள். இவற்றை வாங்கிக் கொள்ளலாமா? எனக் கேட்டுள்ளீர்கள்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள காரியங்களில் இரண்டு வகையானவை இடம் பெற்றுள்ளன.
ஒன்று : அந்தப் பாவமான காரியங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதில் பரிமாறப்படும் உணவை புறக்கணிப்பது. உணவே ஹராம் என்ற அடிப்படையில் அல்ல.
இரண்டாவது : அதல் பரிமாறப்படும் உணவே ஹராம் என்ற அடிப்படையில் உள்ளவை.
மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களான பிறந்தநாள் கொண்டாடுதல் , பெயர்சூட்டுதல், கத்னா செய்தல், கர்ப்பிணிப்பெண்ணுக்கு ஏழாவது மாதம் ஆனதும் பாகுச்சோறு ஆக்கி பகிர்தல், சிறுவர்,சிறுமியர் குர்ஆனை முழுமையாக ஓதிமுடித்துவிட்டால் அதற்காக இனிப்பு கொடுத்துவிடுதல், மார்க்கத்திற்கு மாற்றமான திருமணங்கள் போன்றவற்றை முன்னிட்டு தரப்படும் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம். இந்தக் காரியங்களை நாம் ஆதரிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்.
இந்தக் காரியங்களை முன்னிட்டு தரப்படும் விருந்தில் பங்கெடுத்துவிட்டு நான் இந்தக் காரியங்களை ஆதரிக்கவில்லை என்று கூறினால் இந்தக் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அந்த விருந்தில் நாம் கலந்து கொள்வதே அதை நாம் ஆதரிக்கின்றோம் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.
அதே நேரத்தில் இது போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களுக்கு மற்றும் விருந்திற்கு நம்மை அழைத்து நாம் போகாவிட்டால் இதை நாம் புறக்கணித்து இருக்கின்றோம் என்பதை இது போன்ற காரியங்களைச் செய்யக்கூடியவர்கள் விளங்கிக் கொள்கின்றார்கள். இந்த அடிப்படையில்தான் இது போன்ற காரியங்கள் நடைபெறும் சபைக்குச் சென்று அந்த விருந்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறுகின்றோம்.
இது போன்ற காரியங்களில் வழங்கப்படும் உணவு உண்பதற்கு ஹராம் என்ற அடிப்படையில் இதை நாம் கூறவில்லை. உணவோ, தின்பண்டங்களோ வழங்கப்படாமல் இந்தக் காரியங்கள் நடைபெற்றால் அப்போதும் நாம் இந்தக் காரியங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்றே கூறுகிறோம்.ஏனென்றால் நாம் இவ்வாறு கூறுவதற்கு உணவு காரணமல்ல. மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்பதே காரணமாகும். உணவளிப்பதும் அதன் ஒரு பகுதியாக இருப்பதால் விருந்தையும் புறக்கணிப்பதே அந்தக் காரியத்தை முழுமையாக புறக்கணிப்பதாகும்.
மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள், பித்அத்துகள், ஷிர்க்கான காரியங்கள் போன்றவை இது போன்ற காரியங்களில் இடம் பெறுவதால் அந்தப் பாவத்திற்கு துணைபோய்விடக்கூடாது என்பதற்காகவே  நாம் இந்தத் காரியங்களையும் அதையொட்டி நடைபெறும் விருந்துகளையும் புறக்கணிக்கின்றோம். இது போன்ற காரியங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பது அந்த உணவு ஹராம் என்பதற்காக அல்ல.
மார்க்கத்திற்கு மாற்றமான பாவமான காரியங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்கு நாம் கூறிய இந்தக் காரணம் நமது வீட்டில் இருந்து கொண்டு அந்த உணவை உண்ணும் போது ஏற்படாது. அதாவது இந்த உணவை நமது வீட்டில் இருந்து கொண்டு உண்பதால் அந்தக் காரியங்களை ஆதரிக்கும் நிலை ஏற்படவில்லை. இந்த உணவை உண்பது மார்க்கத்தில் எந்த அடிப்படையிலும் தவறில்லை என்பதால் இதை உண்ணுகிறோம்.
நமது வீட்டிற்கு உணவுகளைக் கொடுத்துவிட்டால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் நமது வீட்டிற்கு கொடுத்து விடப்படும் உணவு அன்பளிப்பு என்ற நிலையை அடைந்து விடுகிறது.
பரீராவுக்கு தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் '' இது பரீராவுக்குத் தர்மமாகும். ஆனால் நமக்கு இது அன்பளிப்பாகும்.'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புஹாரி (1495)
தர்மப் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவது தடையாக இருந்தாலும், தர்மத்தைப் பெற்றவர் அதை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது அதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே அன்பளிப்பு என்ற அடிப்படையில் வீட்டிற்கு வரும் உணவுகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.
நபியவர்களே தமக்கு ஹராமான ஒன்றை அன்பளிப்பாக வரும் போது பெற்றிருப்பதால் நபியவர்களை விட நம்மை பரிசுத்தவான்களாக காட்டுவது கூடாது.
மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு பரிமாறப்படும் விருந்தையும் புறக்கணிக்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதே பாவமான காரியத்தைச் செய்தவர்கள் நமக்கு அன்பளிப்பாக தரும்போது அதைப் பெற்றுக் கொள்வது அந்தக் காரியத்தை ஆதரிப்பதாக ஆகாது. அப்படி இருந்திருந்தால் நபியவர்கள் தர்மப் பொருளை சாப்பிடுவது ஹராமாக உள்ள நிலையில் பரீராவிற்கு தர்மமாக வந்த பொருளை பரீரா நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது நபியவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டார்கள்.
பரீராவிற்குத் தர்மமாக வந்ததை நபியவர்கள் அன்பளிப்பு என்ற முறையில் சாப்பிட்டுள்ளார்கள். இதன்காரணமாக நபியவர்கள் தர்மப் பொருளை புறக்கணிக்கவில்லை. அதனை வேறு வழியில் சாப்பிட்டுள்ளார்கள் என்று கூறுவீர்களா?
மார்க்த்திற்கு மாற்றமான சபைகளில் கலந்து கொள்வதும், அதனை முன்னிட்டு வழங்கப்படும் விருந்து போன்றவற்றில் நேரடியாக கலந்து கொள்வதும் தான் அந்தப் பாவத்தை ஆதரித்தாக ஆகும். அந்தப் பாவத்தில் கலந்து கொண்ட ஒருவன், அல்லது அந்தப் பாவத்தைச் செய்பவன் நம்மைத் தேடிவந்து நமக்கு ஒரு பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால் அதனை நாம் பெற்றுக் கொள்வதில் தவறு கிடையாது. அந்தப் பாவத்தில் கலந்து கொண்டவனும், அந்த உணவை உண்டவனும்தான் பாவத்தை ஆதரித்தவர்களாக ஆவார்களே தவிர நாம் அந்தப் பாவத்தை ஆதரித்தவர்களாக ஆகமாட்டோம். தர்மப் பொருள் ஹராமாக இருந்தும் அன்பளிப்பாக வரும் போது நபியவர்கள் பெற்றுக் கொண்டதைப் போன்று மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களில் கலந்து கொள்வது ஹராமாக இருந்தாலும் அன்பளிப்பு என்ற முறையில் வருவதைப் பெற்றுக் கொள்வதும், அதனை உண்பதும் ஹராமாக ஆகாது.
மவ்லூது, ஹத்தம் ஃபாத்திஹா போன்ற அநாச்சாரங்கள் அரங்கேற்றப்பட்டு தரப்படும் உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் நம்வீட்டிற்கு வந்தாலும் அதை நாம் உண்ணக்கூடாது. மார்க்கத்திற்கு மாற்றமான சபையை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக இதை; உண்ணக்கூடாது என்று நாம் கூறவில்லை.
மாறாக இவ்வாறு தரப்படும் உணவில் புனிதம் இருப்பதாகவும், மற்ற உணவைக் காட்டிலும் இந்த உணவுகளுக்கு தனிச் சிறப்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
மவ்லூது, கந்தூரி, ஃபாத்திஹா போன்றவற்றிற்காக உணவு தயாரிப்பவர்கள் அந்த உணவு முழுவதுமே பரக்கத் நிறைந்தது என்று கருதியே தயாரிக்கின்றார்கள். முழு உணவையும் வைத்து மவ்லூது ஓதாமல் சிறிதளவு எடுத்து வைத்து ஓதினாலும் முழு உணவையும் தபர்ருக் என்றே கூறுவார்கள். அதற்கென்று தனிமகத்துவம் இருப்பதாகவே நினைக்கின்றார்கள். மவ்லூது ஓதுபவர்கள் முழு உணவையும் எடுத்து வைத்து மவ்லூது ஓதாவிட்டாலும் அதை நேர்ச்சையாக எண்ணியே தயாரிப்பதால் அதைச் சாப்பிடக் கூடாது.
ஒரு உணவில் இப்படிப்பட்ட தவறான நம்பிக்கை வைக்கப்படுமானால் அதை உண்பது தடுக்கப்பட்டுவிடுகின்றது. மீறி இந்த உணவை உண்டால் இதில் புனிதம் இருப்பதாக மூடர்கள் நினைப்பதை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.
இந்த உணவு உங்களுக்கு மட்டுமல்ல வேறுயாருக்கும் ஆகுமானதல்ல. இந்த உணவு பூஜை செய்யப்பட்ட பொருட்களின் அந்தஸ்தை எட்டிவிடுகின்றது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை, ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன். (அல்குர்ஆன் 2; : 173)
இந்த வசனத்தில் 'அறுக்கப்பட்டவை' என்று நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் அரபு மூலத்தில் 'உஹில்ல' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். அதாவது அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்ட பொருட்களை உண்ணக்கூடாது என்பதையும் சேர்த்தே இந்த வசனம் கூறுகின்றது.
இந்த அடிப்படையில் சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, முஸ்லிம்கள் என்ற பெயரில் அவ்லியாக்களுக்காப் படைக்கப்பட்ட உணவுகளையும், புனிதம் இருப்பதாகக் கருதப்படும் உணவுகளையும் உண்ணக்கூடாது என்று கூறிவருகின்றோம்.
வரதட்சணை மற்றும் பெண்வீட்டாரிடமிருந்து தரப்படும் உணவு பூஜிக்கப்படுவதில்லை. அதில் புனிதம் இருப்பதாக யாரும் நம்பிக்கை வைப்பதும் இல்லை. மற்ற உணவுகளைப் போன்ற சாதாரண உணவு என்ற நம்பிக்கையில் அது பரிமாறப்படுவதால் அதை உண்ணலாம் என்ற கூறுகின்றோம்.
பிறந்தநாள் கொண்டாடுதல் , பெயர்சூட்டுதல், கத்னா செய்தல், கர்ப்பிணிப்பெண்ணுக்கு ஏழாவது மாதம் ஆனதும் பாகுச்சோறு ஆக்கி பகிர்தல், சிறுவர்,சிறுமியர் குர்ஆனை முழுமையாக ஓதிமுடித்துவிட்டால் அதற்காக இனிப்பு கொடுத்துவிடுதல் போன்ற காரியங்களை முன்னிட்டு செய்யப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் உணவுகளை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டாலும் சாதரண உணவு என்ற அடிப்படையில் அதைப் பெற்றுக் கொள்ளலாம்.
சிறுவர்,சிறுமியர் குர்ஆனை முழுமையாக ஓதிமுடித்துவிட்டால் அதற்காக பாத்திஹா ஓதி இனிப்பு கொடுத்துவிடுதல், மரணித்தவர்க்காக  40 ஆம் நாள் ஃபாதிஹா ஓதி பெட்டிச்சோறு போடுதல், மரணித்தவர் வீட்டிற்குச் சென்றால் ஃபாத்திஹா ஓதுவதற்காக அங்கு வாழைப்பழம் கொடுத்தல் போன்றவை அந்த உணவிற்கு புனிதம் கருதி வழங்கப்படுவதால் இவற்றை அன்பளிப்பாகக் கொடுத்தாலும் உண்பது ஹராம் ஆகும்.

0 comments:

Post a Comment